Monday, November 8, 2010

வீடியோ கேம்

மதுரை :"வீடியோ கேம்' விளையாட்டுக்களில் சிறுவர்கள் ஆர்வம் காட்டினால் கண், மனநல பாதிப்புகளுக்கு ஆளாவர், என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பெருகி விட்ட நிலையில், சிறுவர்கள் வீடியோ கேம், கம்ப்யூட்டர், "டிவி'க்களில் விளையாடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். சில நேரங்களில் பெற்றோரை ஏமாற்றி, கம்ப்யூட்டர் மையங்களுக்கு சென்று வீடியோ விளையாட்டுக்கு அடிமையாகின்றனர். "பளிச்'சிடும் திரை முன்பு பலமணி நேரம் செலவிடுவதால் அவர்களின் கண்ணும், மனமும் பாதிப்படைகிறது. மதுரை அரவிந்த் கண்ஆஸ்பத்திரியின் குழந்தைகள் பிரிவு மூத்த ஆலோசகர் டாக்டர் ஆர்.முரளிதர் கூறியதாவது:"டிவி', வீடியோ கேம்களில் ஈடுபடுவோர் கண்களை சிமிட்ட மறந்து போவார்கள். இதனால், கண்களில் அதிகம் நீர்வற்றிய நிலையில், அதிக சிரத்தை ஏற்பட்டு, உளைச்சல் ஏற்படும்.

தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பதால், கண்கள் சிவந்து போகும். கண்களுக்கு களைப்பு ஏற்படும். இதனால், நேரம் வீணாவதுடன் தேவையின்றி கண்களுக்கு பாதிப்பை விலைக்கு வாங்குவதாக இருக்கும். கண்களில் பார்வை குறைவாக உள்ளவர்களை "மானிட்டர்'களின் முன் நெருங்கி அமர்ந்து ரசிப்பதை வைத்து கண்டு பிடிக்கலாம். இப்படி நெருங்கி அமர்ந்து ரசிப்பதால், மானிட்டர்களில் இருந்து வரும் ஒளி அதிகபட்சமாக "பளிச்'சிடுவதால் மாணவர்களின் கவனம் போகும். அவற்றில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சும் (எலக்ட்ரோ மேக்னடிக் ரேடியேஷன்) மூளைவரை பாதிப்பை ஏற்படுத்தலாம் என ஆய்வுகளை மேற்கொள்வோர் சந்தேகிக்கின்றனர்.

தரமான மொபைல்களில், வெளிப்படும் கதிர்வீச்சின் அளவை குறிப்பிட்டு இருப்பர். பல சீன தயாரிப்புகளில் அவற்றை குறிப்பிடுவதில்லை. வீடியோ கேம்களில் ஆர்வம் காட்டும் சிறுவர்கள் இவற்றையெல்லாம் யோசிப்பதில்லை. பாதிப்பு ஏற்பட்ட பின்பே தெரியவரும். இதனால் சிறுவர்களிடம் மொபைல், "டிவி', வீடியோ போன்றவற்றை தரக்கூடாது. அவற்றை பயன்படுத்தும் அவசியம் இருந்தால், மானிட்டர்களில், ஒளியை கட்டுப்படுத்தும் கண்ணாடிகளை பயன்படுத்தி பார்க்க வேண்டும். இருட்டறையில் இருந்து அவற்றை பார்ப்பதை தவிர்த்து, வெளிச்சத்தில் இருந்தபடி பார்ப்பது கண்களுக்கு நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.

மதுரை அரசு ஆஸ்பத்திரியின் மனநல பிரிவு தலைமை பேராசிரியர் வி.ராமானுஜம் கூறியதாவது: வீடியோ கேம் விளையாடுவது, எந்நேரமும் "டிவி' முன் செலவிடுவது, போதைப் பழக்கத்தை போன்று நம்மை ஆக்கிரமித்து விடும். சிறுவர்கள் அவற்றிற்கு அடிமையாகி விட்டதையே குறிக்கும். இதனால் உடல், உள்ளத்தின் நலம் கெடும். படிப்பின் மீதான ஆர்வமும், கவனமும் கெடும். மொத்தத்தில் வாழ்க்கையே தொலைந்து போகலாம்.வீடியோ பழக்கத்தில் மூழ்கும் சிறுவர்கள் அதற்காக பெற்றோரை ஏமாற்றி பணம் பெறும் சூழ்நிலை உருவாகும். பின்னாளில் அது திருட்டு, மோசடி போன்ற தவறான வழிகாட்டுதலை ஏற்படுத்தும். மனதளவில் அதில் இருந்து மீளமுடியாமல் தவிப்பர். சுய கட்டுப்பாட்டை இழந்து போவர். பள்ளிக்கு போகாமல், போக்குக் காட்டிச் செல்வர். இவ்வாறு அவர் கூறினார். 

Source : Dinamalar

No comments:

Post a Comment