பயங்கரவாதத்தை விரும்பாதவர்கள் இந்திய முஸ்லிம்கள் - விக்கிலீக்ஸ்
Posted by PUTHIYATHENRAL , at 9:37 PM

அமெரிக்கத் தூதரகங்கள் தங்களது தலைமையிடத்துக்கு அனுப்பிய பல்வேறு ரகசிய அரசுமுறை ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதர் டேவிட் முல்ஃபோர்டு அனுப்பிய செய்தி தற்போது வெளியாகியிருக்கிறது. பிரிவினைவாதமும் மதத் தீவிரவாதமும் இந்திய முஸ்லிம்களிடையே பரவலான ஆதரவைப் பெறவில்லை எனவும் பெரும்பாலான முஸ்லிம்கள் மிதவாதக் கொள்கைகளில் பிடிப்புள்ளவர்களாக இருக்கிறார்கள் எனவும் டேவிட் முல்ஃபோர்டு அந்த ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சி, வலுவான ஜனநாயகம், பல்வேறு பண்பாடுகளையும் உள்ளடக்கிய தன்மை போன்றவை காரணமாக சமூகத்துடன் இணைந்து வாழ்வதையே இந்திய முஸ்லிம்கள் விரும்புவதாகவும் அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலான முஸ்லிம் இளைஞர்கள் மற்ற சமூகத்துடன் கலந்துவிட விரும்புவதால், பயங்கரவாதத் செயல்களுக்கு ஆளெடுப்பது மிகமிகக் குறைந்துவிட்டதாகவும் அந்த ஆவணம் கூறுகிறது. இந்தியாவின் மிக உயர்ந்த குடியரசுத் தலைவர் பதவியை முஸ்லிம் ஒருவர் வகித்தது, அரசியலில் ஈடுபடவும் பொருளாதார வெற்றி பெறவும் முஸ்லிம் சமூகத்துக்கு உந்துசக்தியாக அமைந்தது எனவும் முல்ஃபோர்டு குறிப்பிட்டுள்ளார். சானியா மிர்சா, ஷாருக்கான் போன்றவர்கள் இந்திய சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நட்சத்திரங்களாக இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Thanks to : http://sinthikkavum.blogspot.com/2010/12/blog-post_2448.html
No comments:
Post a Comment